தமிழக செய்திகள்

தொடர் விடுமுறை - சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3.44 கோடி வருவாய் ஈட்டி போக்குவரத்து கழகம் சாதனை

சிறப்பு பஸ்கள் மொத்தம் 6 லட்சத்து 55 ஆயிரத்து 593 கிலோ மீட்டருக்கு இயக்கப்பட்டன.

மே தினம், சித்ரா பவுர்ணமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக கடந்த 30-ந்தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 52 வருவாய் கிடைத்து உள்ளது. சிறப்பு பஸ்கள் மொத்தம் 6 லட்சத்து 55 ஆயிரத்து 593 கிலோ மீட்டருக்கு இயக்கப்பட்டன.

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.52.54 என்ற அளவில் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இது அரசு விரைவு போக்குவரத்து கழக வரலாற்றில் ஒரு கிலோ மீட்டருக்கு ஈட்டப்பட்ட உச்சபட்ச வருவாய் ஆகும்.

இது கடந்த காலத்தில் 22.5.2023 அன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டபோது ஒரு கிலோ மீட்டருக்கு ஈட்டிய வருவாய் ரூ.51.53 யை காட்டிலும் ரூ.1.01 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை அடைய இரவு, பகலாக சிறப்பாக பணியாற்றிய டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பாதுகாவலர்கள், கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், பரிசோதகர்கள், பணிமனை, அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலக மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள், மற்றும் அனைத்து அலுவலர்களையும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாராட்டி உள்ளார்.