சென்னை:
புனித வெள்ளி நாளை மறுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 575 பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை நாட்களில் 395 பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 100 பஸ்களும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 90 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோல மாதவரத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தலா 24 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இது தவிர 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு, திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 735 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,257 இயக்கப்படுகிறது.