மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள் ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் கோர்ட் டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அங்கிட் திவாரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வாரம் தோறும் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. இது உடல் மற்றும் மனரீதியாக அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அதிக செலவையும் ஏற்படுத்துவதாக உள்ளது. வயதான பெற்றோரையும் முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிட் திவாரிக்கு நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவார். எனவே நிபந்தனையை தளர்த்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வாரம் ஒரு முறை திங்கட்கிழமை கையெழுத்திடுவதை 2 வாரத்திற்கு ஒருமுறை திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.