தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் பரவும் சூழல் எழுந்துள்ளது. மற்றொரு புறம், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் பகல் வேளைகளில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று வெப்பவாத பாதிப்புகளை (ஹீட் ஸ்ட்ரோக்) எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாவோரின் உடல் வெப்ப நிலையைக் குறைக்க மருத்துவரின் பரிந்துரையின்றி சிலர் வெவ்வேறு மாத்திரைகளை உட்கொள்வதாகத் தெரிகிறது. இதனால், கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வெப்ப வாதம் பாதிக்கப்பட்டு எவருக்கேனும் மயக்கம் ஏற்பட்டாலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் ஒருபக்கமாக படுக்க வைப்பது அவசியம். அவர்களை தண்ணீர், இளநீர், மோர் பருகச் செய்து உடல் வெப்ப நிலையை குறைக்கலாம்.
மேலும், நீரில் நனைத்த துணியை உடலில் வைத்து துடைத்து வெப்பத்தைத் தணிக்க வேண்டும். காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை கொடுத்தால், காய்ச்சல் குறைந்தாலும், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே மருத்துவரின் பரிந்துரையின்படி மட்டுமே கோடை காலத்தில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.