தமிழக செய்திகள்

TN Assembly Election | மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - எச்.ராஜா

ப.சிதம்பரம் எதிர்க்கிறார் என்றாலே அது மிகப்பெரிய பொய் தான். தமிழகம் பாதிக்கப்படுகிறது என்று ஏதாவதொரு காரணம் சொல்ல முடியுமா?

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்தல் தமிழகத்துக்கு முக்கியமான தேர்தல். கடந்த 10 நாட்களில் தேர்தல் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் திருத்தம் கொண்டு வந்தால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் பாதிக்கப்படாது. ஆனால், தமிழகம், கேரளா ஆகியவை பாதிக்கும். இதனால் எந்த மாநிலமும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பழைய விகிதாசாரம் மாறாத வகையில் தொகுதி கள் மறுவரையறை மசோ தாவை மத்திய அரசு கொண்டு வருகிறது.

இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் தெளிவாக பேசிவிட்டனர். அதன்பின்னரும் ஸ்டாலின் தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வருகிறார். ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. தோற்க போகிறோம் என்ற பயத்தில் உள்ளார். பேசுவதற்கு விஷயம் இல்லாத காரணத்தால் சம்பந்தமின்றி பேசுகிறார்.

மிகப்பெரிய அளவில் தி.மு.க. தோல்வியை தழுவ போகிறது. கடந்த 1962-ம் ஆண்டை நாங்கள் ஏற்கெனவே பார்த்து விட்டோம். உங்கள் திராவிட கொள்கை சுடுகாட்டுக்கு போய்விட்டது. தேசியத்துக்கு எதிராக பேசினால் பெரிய மனுசன் என்று நினைக்கிறார்.

ப.சிதம்பரம் எதிர்க்கிறார் என்றாலே அது மிகப்பெரிய பொய் தான். தமிழகம் பாதிக்கப்படுகிறது என்று ஏதாவதொரு காரணம் சொல்ல முடியுமா? அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று சொன்னால், முழு பாரதமும் நன்றி சொல்லும்.

அவர் பயனே இல்லாத ஓர் அரசியல்வாதி. அவர் வாய்மூடி இருந்தாலே மகனுக்காவது பயனாக இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நூறு நாள் திட்டத்தை நிறுத்திவிடுவர் என்று பொய் சொன்னவர் தான் ப.சிதம்பரம்.

காரைக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக மாங்குடி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் இத்தொகுதிக்காக சட்டப்பேரவையில் எதுவும் பேசவில்லை. அவர் காரைக்குடி தொகுதிக்கு தேவையில்லாத நபராக இருக்கிறார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று பிரேமலதா பேசியுள்ளார்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளால் 1,700 பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதைபற்றி பேசியிருக்கக் கூடாது. இருந்தாலும் முதல்வர் முன்னிலையில் பேசியது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.