சைதாப்பேட்டை:
சைதாப்பேட்டை, பன்னீர் செல்வம் நகரில் அம்பேத்கர் விளையாட்டு திடல் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு தினந்தோறும் காலை, மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
இந்தநிலையில் மைதானத்திற்குள் வெளிநபர்கள் ஏராளமானோர் தங்களது கார், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால் மைதானம் தற்போது பார்க்கிங் பகுதியாக மாறி விட்டது. மைதானம் முழுவதும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் மைதானத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் கால்பந்து விளையாடுபவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதே போல் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக மைதானத்திற்குள் தஞ்சம் அடைவதால் அசுத்தம் அடைந்து வருகிறது.
எனவே மைதானத்திற்குள் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், மாடுகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மைதானத்திற்கு வந்த இளைஞர்கள் கூறும்போது, மைதானத்திற்குள் வாகனங்கள் நிறுத்தப்படுவது மற்றும் மாடுகள் பிரச்சனை குறித்து பல முறை கோடம்பாக்கம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மைதானத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்றனர்.