கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.
கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.