திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி துறையூரில் அரசு முட்டைகளை பயன்படுத்தி வந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்றவர் யார், விற்பனை செய்தவர் இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் விற்றார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கும் விற்பனை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டல் உரிமையாளரிடம் அரசு முட்டைகளை அவருக்கு விற்றது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.