தமிழக செய்திகள்

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசு பேருந்து நெல்லூரில் மீட்பு- வாலிபர் கைது

கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

மாலை மலர்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.