தமிழக செய்திகள்

ராசிபுரம் அருகே அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம்

சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

ராசிபுரம்:

சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் நாமக்கல் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த இளங்கோவன் (49) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் மற்றொரு டிரைவராக சிவக்குமார் என்பவரும் இருந்தார்.

விழுப்புரம் வரை இளங்கோவன் பஸ்சை ஓட்டி வந்த நிலையில் சோர்வாக இருந்ததால் பஸ்சின் பின் சீட்டில் உறங்க சென்று விட்டார். இதையடுத்து சிவக்குமார் பஸ்சை ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு அருகே பஸ் வந்தபோது, இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.