தமிழக செய்திகள்

பழனி இடும்பன் கோவிலில் தங்க, வெள்ளி நகைகள் மாயம் - பக்தர்கள் அதிர்ச்சி

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி இடும்பன் கோவிலுக்கு நேரில் வந்து விமலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரி பட்டியில் இடும்பன் கோவில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் தங்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையை இடும்பன் கோவிலில் இருந்து தொடங்குகின்றனர்.

தற்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவில் பதிவேடுகள், சுவாமி நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளிவேல் ஒன்று மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு முன்பாக கோவில் செயல் அலுவலராக விமலா என்பவர் பணிபுரிந்தபோது இந்த நகைகள் மாயமாகி உள்ளதாகவும், தற்போது அவர் பணி மாறுதலாகி சென்றுள்ளதாகவும் நரசிம்மன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி இடும்பன் கோவிலுக்கு நேரில் வந்து விமலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

கோவில் நகைகள் காணாமல் போன விவகாரம் பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும் பக்தர்களுக்கு தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் நகைகள் திருடப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.