தமிழக செய்திகள்

திருவாரூரில் பத்திரிகையாளரை வீடு புகுந்து சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்

மதுபாட்டில்களால் அவரது தலையில் அடித்து, உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு அவரது உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு கும்பல் அங்கிருந்து சென்றது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வருபவர் ஹாஜா மொகைதீன் (38).

அப்பகுதியில் கஞ்சா விநியோகித்து சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த அப்துல் பாசித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு ஹாஜா மொகைதீனின் வீடு புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

மதுபாட்டில்களால் அவரது தலையில் அடித்து, உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு அவரது உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு கும்பல் அங்கிருந்து சென்றது.

ஹாஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காயங்கள் ஆழமாக உள்ளதால் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அப்துல் பாசித் உள்ளிட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.