தமிழக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் சென்னை வீரர்

விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 விமானிகளின் பெயரை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் ஆவார். 19.4.1982 அன்று பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

கடந்த 21.6.2003 அன்று இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் நியமிக்கப்பட்ட இவர், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கு 'டெஸ்ட் பைலட்'டாகவும் இருந்துள்ளார்.

இவருக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. பல்வேறு அதிநவீன விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்த இவர், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார்.

விண்வெளிக்கு செல்லும் விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 47.

விமானி அங்கத் பிரதாப், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 41. விமானி சுபன்சு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 38 ஆகும்.

இவர்களும், இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.