தமிழக செய்திகள்

சென்னையில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு

சென்னையின் 16 தொகுதி வாக்குப்பெட்டிகள் 3 பிரிவாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.29 சதவீத வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி, லயோலா கல்லூரிக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்தடைந்தன.

சென்னையின் 16 தொகுதி வாக்குப்பெட்டிகள் 3 பிரிவாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரம்பூர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் 'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

தி.நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம், அண்ணாநகர் வாக்குப்பெட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.