தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு- ஆளுநரின் செயலாளர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிப்பு.

வேலைக்கு லஞ்சம்- சிபிஐ வழக்கு விசாரணையை எதிர்த்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜேந்திர பாலாஜியை விசாரிக்கும் இசைவாணையை தமிழ்நாடு ஆளுநர் வழங்கினாரா ? இல்லையா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது, இருப்பினும் உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநரின் இசைவாணைக்கு காத்திருக்கிறோம் எனவும் தமிழக அரசு தெரிவத்துள்ளது.

அப்போது, வழக்கு தொடர ஆளுநர் இசைவாணை இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழக அரின் கடிதம் தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் செயலர் என்ன கூற விரும்புகிறார் எனத் தெரிய வேண்டும் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தர தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளேன்.

ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரிய தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.