தமிழ்நாடு செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் மறைவு- முதலமைச்சர் நேரில் அஞ்சலி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை மலர்

திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.

கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார். க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிறகு, க.சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.