‘சாதி, பணம்’ ஆகிய இரண்டும்தான் இனி தமிழ்நாடு அரசியல் என மாநில பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார். மேலும் சாதி ஒழிப்பு எனக்கூறிவிட்டு, ஆனால் அதனை தூண்டிவிட்டு அதன் விளைவுகளில் குளிர்காயும் அரசியலைத்தான் திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக செய்கிறது எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
“சாதியை பாதுகாப்பவர்களே சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்துப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதே’.
சாதியை உருவாக்கிய கூட்டம், இப்போதும் அதைச் சரி என்று சாதிக்கும் கூட்டம், சாதிய அணிசேர்க்கைக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகமளிக்கும் கூட்டம், சாதியப் பாகுபாடுகளை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் கூட்டம் பாஜக - ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகம் அறியும்.
தேர்தல் அரசியலில் சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்து பாஜக தலைவர் நாராயணன் கூறியிருப்பது "சாத்தான் வேதம் ஓதுவது போல" இருக்கிறது.
"பண்பாடு" என்ற பெயரில் சாதியைக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக இருப்பவர்களே நீங்களும், உங்கள் மதமும் தானே” எனக் குறிப்பிட்டுள்ளார்.