தமிழக செய்திகள்

கிரிவலம் செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு...

பவுர்ணமி இன்று மதியம் 12.50 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.

திருவண்ணாமலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அந்த வகையில், இன்று வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. பவுர்ணமி இன்று மதியம் 12.50 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று கிரிவலம் செல்வது சிறப்பானதாகும். அதன்படி, இன்று மதியத்தில் இருந்து கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த நிலையில், கிரிவலம் செல்ல உள்ள பக்தர்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடி, மின்னலின் போது மரங்களுக்கு அடியில் நிற்பது, நடப்பதை தவிர்ப்பது அவசியம், மழைப்பொழிவு 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் மழைக்கு பின்பு கிரிவலம் செல்லலாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.