தமிழ்நாடு காவல் துறையில் போலீசார் மீதான ஊழல், லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற புகார்களைத் தெரிவிக்க மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக புதிய விசாரணை தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை காவல் துறையினர் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க 78717 23000 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களுக்கும் தனித்தனி மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிமையாக வாட்ஸ்அப் மற்றும் மொபைல் எண்கள் மூலம் அனுப்பலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.
அனைத்து புகார்களும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊழலற்ற காவல்துறையை உறுதிசெய்ய மக்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் தமிழ்நாடு டிஜபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்-கண்காணிப்புப் பிரிவுகளின் செயல்பாடுகள் மூத்த காவல் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.