தமிழக செய்திகள்

Floor Test | த.வெ.க. அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இன்று பேரவை தொடங்கியதும் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதலமைச்சர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெறும்.

226 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான (108) இடங்களை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. எனினும் ஆட்சி அமைக்க 118 என்ற எண்ணிக்கை தேவை என்பதால், மற்ற கட்சிகளில் ஆதரவை நாடியது.

அதன்படி காங்கிரஸ் (5), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) மற்றும் விடுதலை சிறுத்தைகள் (2), ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். இவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

17 வது சட்டப்பேரவை கடந்த மே 10-ஆம் தேதி கூடிய நிலையில், நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்தி, சட்டப்பேரவையில் இன்று விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அவையில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும்.

குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.