தமிழக செய்திகள்

CM-ஆக முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- வழிநெடுகிலும் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.

திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயக்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.

அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜயை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார்.

செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இதுவாகும்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

வழி நெடுக இருபுறமும் காத்திருந்த தொண்டர்களும் பெண்களும் முதல்வர் விஜய்க்கு ஆரவாரமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.