தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

அமைச்சரவை கூடி முடிவெடுத்த பிறகு, முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கடந்த மாதம் (மே) 4-ந்தேதி முடிவுகள் வெளியானது. அதில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10-ந்தேதி முதலமைச்சராக விஜய் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து 23 த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பின்னர் வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ளார். இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது தொடங்கி உள்ளது. முன்னதாக இதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அமைச்சரவை கூடி முடிவெடுத்த பிறகு, முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும். தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகின. மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது.

இந்த விவகாரங்கள் குறித்தும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.