தமிழக செய்திகள்

தர்மபுரியில் ரெயில் பெட்டியில் தீவிபத்து

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரெயிலின் 5-வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

தருமபுரி ரெயில் நிலையத்தில், பெங்களூரு–சேலம் பேசஞ்சர் ரெயிலின் ஒரு பெட்டியின் கீழ்பகுதியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் நோக்கி இயக்கப்படும் பேசஞ்சர் ரெயில், நேற்று இரவு 7.13 மணியளவில் தருமபுரி ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது ரெயிலின் 5-வது பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள சஸ்பென்ஷன் ஸ்பிரிங் பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது.

இதனை கவனித்த ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரெயில்வே காவல்து றையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இணைந்து விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர். தீ அணைக்கும் பணிகள் காரணமாக ரெயில் சுமார் 47 நிமிடங்கள் தாமதமாக தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.

சம்பவம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதமும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. திடீரென ரெயிலில் தீப்பிடித்ததால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ரெயில்வே அதிகாரிகள் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT