தமிழக செய்திகள்

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்பான பொருட்கள் சேதம்

கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maalaimalar

ஈரோடு:

ஈரோடு பெரியவலசு கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மர சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்நிலையில் பொன்னுசாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் மற்றும் மிஷின்கள் முற்றி லும் சேதம் அடைந்தன.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து நடந்த பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.