சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர், வேம்புலி தெருவில் வசித்து வந்த 20 வயது வாலிபரான சதீஷ், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். தந்தை சக்திவேல் வீண்தகராறு செய்து கத்தியால் தாக்கியதில்தான் சதீஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தடுக்க சென்ற சக்திவேலின் மனைவி மற்றும் மகளையும் கத்தியால் தாக்கிவிட்டு சக்திவேல் தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் ராமாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் சதீஷின் தந்தை சக்திவேல் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு பூந்தமல்லி, 2வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.7,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த இராமாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.