சென்னை:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பை தாண்டு எதிர்ப்புறம் வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடலூர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு பேருந்து மற்றும் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்று செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.