கொல்கத்தாவில் இருந்து 224 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில், தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென இடதுபுற என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு 11:29 மணியளவில் விமான ஓட்டுநர் எஞ்சின் செயலிழந்ததை உணர்ந்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தி அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. என்ஜின் பழுது ஏற்பட்ட போதிலும், விமானி திறம்படச் செயல்பட்டு இரவு 11:37 மணியளவில் விமானத்தை ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
விமானத்தில் இருந்த 224 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரவு 11:47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டு, விமான நிலையச் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.