தமிழக செய்திகள்

ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றுங்கள்..!- பா.ரஞ்சித்

தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தவெக தலைமையிலான தமிழக அரசே இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!

தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.

ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது.

சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.

தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.

காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.

“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது.

ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.