தமிழக செய்திகள்

உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையின் இரு புறமும், யானை கூட்டங்கள் அதிக அளவு முகாமிட்டுள்ளன.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வனப்பகுதிகளிலுள்ள யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள், குடிநீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து அமராவதி அணையை நோக்கி செல்கின்றன.

இதனால் அணைப்பகுதியில் ஏராளமான விலங்குகள் காணப்படுகின்றன. அதிலும், உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையை அதிக அளவு காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்து வருகின்றன.

சாலையின் இரு புறமும், யானை கூட்டங்கள் அதிக அளவு முகாமிட்டுள்ளன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், தமிழக-கேரள வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

யானைகள் சாலையை கடக்கும் நேரத்தில், வாகனங்களை நிறுத்தி காத்திருந்து யானைகள் சாலையை கடந்த பின் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வன விலங்குளை இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.