தமிழக செய்திகள்

நாட்டு வெடிகுண்டை விழுங்கிய யானைக் குட்டி பரிதாப பலி.. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சோகம்

யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.

வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.