தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்.23ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவும், மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரிகிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு காவல் கண்காணிப்பாளராக கிரண் சுருதிதியும், நாகப்பட்டினத்திற்கு சுர்ஜித் குமாரும், விருதுநகருக்கு ஸ்ரீநதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா பாரபட்சமாக நடப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.