பொதுமக்கள் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி தேடிய போலீசார் ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.
சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது, தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி போலீசார் தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீல் மல்க நன்றி தெரிவித்தார்.