தமிழக செய்திகள்

தென்காசி அருகே அரசு பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 70). இவர் இன்று காலை மேட்டூரில் இருந்து நெல்லைக்கு செல்வதற்காக அங்குள்ள நிறுத்தத்தில் பஸ்சுக்காக வெகுநேரமாக காத்திருந்தார். இந்த நிலையில் அந்த வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அந்த பஸ்சில் மூதாட்டி சுப்பம்மாள் ஏறியுள்ளார். அப்போது வயது மூப்பு காரணமாக படிக்கட்டில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

ஒருவழியாக அவர் படிக்கட்டில் ஏறிடவே, அந்த நேரத்தில் டிரைவர் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி மூதாட்டி சுப்பம்மாள் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்பம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி கடையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT