தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 40 காசுகள் சரிவு- பண்ணையாளர்கள் கவலை

நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதால் பண்ணையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மாலை மலர்

நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூடி முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் பல கோடி முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்துள்ளதால் முட்டை விலையை குறைக்க முடிவு செய்தனர்.

அதன்படி 425 காசுகளாக இருந்த முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து 405 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடந்த 22-ந்தேதி 445 காசுகளாக இருந்த முட்டை விலை 3 நாட்களில் 40 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை தேக்கம் அடைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலையில் 405 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டதால் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதால் பண்ணையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி விலை 85 ரூபாயாகவும், பல்லடத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 129 ரூபாயாகவும் நீடிக்கிறது.