தமிழ்நாடு செய்திகள்

ஓணம் திருநாள்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கிறார்கள்.அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருஓணத் திருநாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த "ஓணம்" திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.