தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக சென்னைக்கு திரும்ப தொடங்கினார்கள். இன்று காலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விடுதியை காலி செய்தனர்.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6- ந்தேதி இரவு முதல் புதுச்சேரி பூரணாங்குபத்தை அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 37 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் அங்கு தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேர ஆலோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சென்னை திரும்பினார். தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்குள் சென்னைக்கு திரும்ப அ.தி.மு.க. கட்சி தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக சென்னைக்கு திரும்ப தொடங்கினார்கள். இன்று காலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விடுதியை காலி செய்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள். அவர்கள் இன்று காலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்றனர்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

விஜய் ஆட்சி அமைக்க ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.