ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர், துரை வைகோ எம்.பி. தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திருச்சி - திருப்பதி இடையே ரெயில் இயக்கப்படும் என்று ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருச்சி - திருப்பதி இடையேயான பகல் நேர ரெயில் சேவைக்கு ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, குண்டூர் - திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர ரெயில் சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி - குண்டூர் - திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
மேலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து பல முறை வலியுறுத்தியிருந்தேன்.
இந்த நீட்டிக்கப்பட்ட புதிய ரெயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இதற்காக ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும், தென்னக ரெயில்வே மற்றும் திருச்சி மண்டல ரெயில்வே அதி காரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.