தமிழக செய்திகள்

பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் நடமாட வேண்டாம்- வெயில் கொளுத்துவதால் மக்களுக்கு அறிவுரை

கடினமான உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சர்வ சாதாரணமாக 103 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெளியில் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் புழுக்கம் ஏற்பட்டு மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

இதேபோல் பகல் நேரங்களில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் புதிதாக வெப்ப தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு வெயிலில் மயக்கம் அடைபவர்கள், தலைச்சுற்றல் போன்ற வெயில் உடல் உபாதைகள் சிகிச்சை அளிக்கவும்

ஓஆர்எஸ் கரைசல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கே பிரச்சனை அதிகமாக ஐந்து படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, கார்போனைட் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். கஞ்சி, ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறு பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். கடினமான உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மயக்கம், உடல் நல குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

அரசின் 100 நாட்கள் வேலை திட்ட பணியின் போது போதிய குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டம் முழுவதும் 94,858 ஓஆர்எஸ் கரைசல் 13592 ஐ வி திரவம் கையிருப்பில் உள்ளன. அவசரகால ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.