தமிழக செய்திகள்

விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக்கு முன்பு ஆஜராவதற்கு முறையான சம்மன் அனுப்பப்பட வேண்டும்.

விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு, அதில் விசாரணை தேதி, நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், விசாரணை குறித்த விவரங்கள் காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

காவல் துறையின் விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை; அதேநேரம் துன்புறுத்தல்களை பார்த்து கண்மூடி கொண்டிருப்பதும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.