திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 23) மாலை அக்கட்சியின் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘இன்றைய சூழலுக்கு ஏற்ப இளைஞரணி சமூக வலைதளங்களில் வேலை செய்ய வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
அவர்களே சொந்தமாக கன்டன்ட் கிரியேட் செய்யும் வகையில் இளைஞர் அணிக்கு ஒர்க் ஷாப் நடத்த உதயநிதிக்கு அறிவுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக வெற்றி குறித்து பேசிய அவர், "அவர்களுக்கு விழுந்தது சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது அல்ல.
இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது.
குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச நாளில் நம்மை தேடி வருவார்கள். இருப்பினும் நீங்கள் சோர்ந்து போகாமல் வேலையை பாருங்கள்." என்று தெரிவித்தார்.