கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!

திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் இன்று அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மேகதாது அணை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படும் மறுவரையறை மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள்!” என தெரிவித்துள்ளார்.