முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் வழக்கில், தி.மு.க. வேட்பாளர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதி வாக்காளர் சிவராஜ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர்களுக்கும், வாக் காளர்களுக்கும் உத்தர விட்டு, விசாரணையை செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.