தமிழக செய்திகள்

பிரச்சாரத்தின்போது ஆண் குழந்தைக்கு ‘உதய சூரியன்’ என பெயரிட்ட துணை முதலமைச்சர்!

பிரச்சாரத்தின் நடுவே குழந்தைக்கு பெயர்வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக தரப்பில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக உள்ள பிரபாகர் ராஜாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 2021-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரபாகர் ராஜா.

மீண்டும் இத்தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவின் மகன் ஆவார். திமுக-வில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த பிரச்சாரத்தின் நடுவில் ஆண்குழந்தை ஒன்றிற்கு உதயநிதி ஸ்டாலின் பெயர்வைத்தார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்தோர் பெயர்வைக்க வேண்டும் என குழந்தையை கொடுக்க, ஆண் குழந்தையா எனக்கேட்டு, ஆண் குழந்தை என்றவுடன் உதயசூரியன் என பெயர் வைத்தார்.