தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு - ஆப்பிள் நிறுவன ஊழியர் கைது!

கோவை சிறுமி கொலைவழக்கில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கார்த்தி மற்றும் மோகன் ராஜ் என்ற இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவன ஊழியர் ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் பணியில் இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் கோவை சிறுமி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயை ஆபாச வார்த்தைகளால் திட்டி, சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், இவரின்மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

SCROLL FOR NEXT