களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையின் ஓரம் இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. குழந்தையின் சடலத்தில் இருந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசியது யார்? குழந்தை கள்ளக்காதலால் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா? அல்லது குழந்தை இறந்ததால் வீசி சென்றார்களா? குறை பிரசவத்தில் இறந்த குழந்தையை சாலையோரம் வீசினார்களா? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.