தமிழ்நாடு செய்திகள்

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் சி.வி. சண்முகம் எம்.பி. திடீர் சந்திப்பு

பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.தற்போதைய அரசியல் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

Maalaimalar

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்த ராமதாஸ் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என் பக்கம் தான் உள்ளனர். நான் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வேன் என கூறி இருந்தார்.

கடந்த சில நாட்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை சென்று இருந்தார்.

இந்த நிலையில் அவர் திண்டிவனம் திரும்பினார். இன்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் இருந்தார். அவரை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்து பேசினார். சி.வி.சண்முகத்தின் சகோதரர் மகன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு ராமதாசுக்கு அவர் அழைப்பிதழ் வழங்கினார்.

மேலும் அவர்கள் தற்போதைய அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.