பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வர பேசியதாவது;
"தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. ஆணவக் கொலைகள் நடப்பது தமிழகத்திற்கு அவப்பெயர். இது தமிழகத்திற்கு அழகல்ல.
கட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் தாக்குதல் நடக்கும் அளவுக்கு யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.
யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. எங்களை நாடி வருவோரை நாங்கள் பாதுகாக்கிறோம்.
காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும் சில சாதி அமைப்புகள்தான் இதை ஊதிப் பெரிதாக்குகின்றன.
சாதிவெறியை தூண்டும் சாதி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும்.
சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.