பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் வடமாடு விரட்டு எனப்படும் மாடுபிடி திருவிழா முதல்முறையாக வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஜோதிஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற வடமாடு விரட்டு நிகழ்ச்சியில் சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் மாடு விடப்பட்டது .
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.
இதனை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர். சிறப்பாக மாடுகளை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பிடிபடாமல் ஓடிய மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.