கடலூர்:
கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான விஷ்ணு பிரசாத் வடலூரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியைப் பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். அது பலனளிக்கவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து லிப்டின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே பழுதுக்கு காரணம் என தெரிய வந்தது.