தமிழக செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு

சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

சென்னை:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.